ஐ. நா மனித உரிமை சபையில் (46வது) நாற்பத்தி ஆறாவது கூட்டத் தொடரில், சிறீலங்கா மீது தயாராகியுள்ள தீர்மானத்தின் திருத்த வரைவு (A/HRC//L-/REV.1) சில சில மாற்றங்களுடன் மனித உரிமை
சபையின் செயலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மார்ச் மாதம் 16 ஆம் திகதி பதிவாகியுள்ளது.
சிலர் தீர்மானத்தின் உள்ளடக்கத்தை சரியான முறையில் புரிந்து கொள்ளாது விதண்டாவாதம் செய்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் சிலரது வாயிலிருந்து வெளிவரும் இரண்டு ஆங்கிலச் சொற்பதங்கள் - ஒன்று I.C.C. (சர்வதேச கிறிமினல் நீதிமன்றம்), மற்றையது IIIM – (International Independent and Impartial Mechanism).
அதாவது சர்வதேச பக்கச் சார்பற்ற மற்றும் சுயாதீனப் பொறிமுறை. இவை பற்றி கதைக்கும் பலருக்கு, இவற்றின் வரவிலக்கணம் செயற்பாடுகள் வழிமுறைகள் பற்றி அறவே அறியாது தெரியாது புரியாது புசத்துகின்றனர்.
விசேடமாக IIIMம் பற்றிய உண்மையை கூறுவதானால், இதற்கான அத்திவாரம் ஆரம்பத்தில் உருவான “Zero draft" எனப்படும் தீர்மானத்தின், ஆறாவது பந்தியில் ‘பிள்ளையார் சுழி’ இடப்பட்டுள்ளதை இவர்களால் புரியமுடியவில்லை என்பது பரிதாபத்திற்குரிய விடயம். இதனால், இவர்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறர்கள் என்பதே உண்மை.
இலங்கையின் விடயம் ஐ.நா மனித உரிமை சபையிலிருந்து வெளியில் கொண்டுவரப்பட வேண்டுமென சிலர் புசத்துகிறார்கள். தற்போதைய தீர்மானத்தில், I.C.C. என்ற கதைக்கு இடமில்லை என்பதைப் பலநாடுகள் அறுத்து உறுத்தி கூறிவிட்டனர்.
அப்படியானால் இலங்கையை எப்படியாக மனித உரிமை சபையிலிருந்து வேறு இடத்திற்கு நகர்த்துவது?
எதிர்வரும் திங்கட்கிழமை 22ம் திகதி, இலங்கை மீதான தீர்மானம் தோற்கடிக்கப்பட்டால், முள்ளிவாய்க்கால் முடிவிற்கு வந்த வேளையில் - 2009 ஆம் ஆண்டு மே மாதம் தெற்கில் - பால் பொங்கல், வெடி, வானவேடிக்கைகளுடன் பலவிதப்பட்ட கொண்டாட்டங்கள் நடைபெற்றது போன்று, மீண்டும் திங்கட்கிழமை 22ம் திகதி தெற்கில் நடைபெறவேண்டும் என்பது தான் இந்த ‘மாதன முத்தாக்களின்’. விருப்பமா?
விதண்டாவாதம் செய்யும் பொழுது முன்பின் ஆய்வு செய்து கதைக்க வேண்டும். இன்றைய நிலையில் இலங்கை அரசு இத் தீர்மானம் விடயமாக என்ன அணுகுமுறையைக் கொண்டுள்ளார்கள். என்பதை நாம் ஆராயவேண்டும்.
கடந்த வாரம் என்னால் கூறப்பட்டது போல் இத் தீர்மானம் நிச்சயம் வெற்றியடையும். ஆனால், இலங்கை அரசின் கூடுதலான நிர்வாகிகள், முன்னாள் இராணுவத்தினர் ஆகையால், தாம் போராடித் தோல்வி அடையலாம் என்ற கொள்கையைக் கொண்டுள்ளனர்.
இவ் அடிப்படையில் இலங்கை - சீனாவின் உதவியுடன் ஆசியா, ஆபிரிக்க நாடுகளையும், பாகிஸ்தானின் உதவியுடன் இஸ்லாமிய நாடுகளையும், கியூபாவின் உதவியுடன் லத்தீன் அமெரிக்கா (தென் அமெரிக்கா) நாடுகளையும் நோக்கி, சூறாவளி பிரச்சாரத்தில் தமக்கு வாக்கு திரட்டும் பணியில் இறுதி முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இப்பிரச்சாரத்தை இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னின்று நேரடியாக நடத்துகின்றார். இவர் பல ஆசியா, ஆபிரிக்க, ஆபிரிக்க லத்தீன் அமெரிக்கா தலைவர்கள், ஜனாதிபதி, பிரதமர்களுடன் தொலைபேசியில் கதைத்து தம்மை ஆதரிக்குமாறு வேண்டியுள்ளார்.
இதேவேளை இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியுடனும் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இந்தியாவைப் பொறுத்த வரையில், அவர்கள் இத் தீர்மானத்திற்கு எதிராக ஒரு பொழுதும் வாக்களிக்க மாட்டார்கள். ஒன்றில் நடுநிலை வகிப்பார்கள், அல்லது தீர்மானத்தை ஆதரிப்பார்கள் என்பதே நடைமுறை சாத்தியம். எதிர்வரும் தமிழ் நாட்டுத் தேர்தலில், மோடியின் கூட்டு கட்சியின் தோல்விக்கு இவர்கள் வழிவகுக்க மாட்டார்கள் என்பதே உண்மை. இன்றைய பேரம் பேசும் நிலையில், இந்தியா நடுநிலை வகிப்பதே பெரிய விடயமாகும்.
கடந்த ஓக்டோபர் மாதம் என்னால் ஆரூடம் கூறப்பட்டது போல் தீர்மானம் நிச்சயமாக இருபது முதல் இருபத்தைந்து (20-25) வாக்குகளால் வெற்றி பெறும். தற்போதைய நிலையில் இத் தீர்மானத்திற்கு எதிராக பத்திற்கும், பதின்மூன்று (10-13) நாடுகளே வாக்களிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியானால் ஏறக்குறைய எட்டிலிருந்து பத்து நாடுகள் (8-10) நடுநிலைமையாக வாக்களிக்கக் கூடிய சாத்வீக கூறுகளே பெரிதும் காணப்படுகிறது.
“முள்ளு செடியில் துணியை போட்டால், மிகவும் அவதானமாக எடுக்கத் தவறும் பட்சத்தில், துணி கிழிந்து நெளிந்து எந்த நன்மையும் அற்ற நிலையில் துண்டாகும்” என்பதைத் தமிழீழ மக்கள் நாட்டிலும் புலத்தில் மனதில் கொள்ள வேண்டும்.
-ச.வி.கிருபாகரன்- பிரான்ஸ்
lnw