கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் நிதி அமைச்சு ஊடாக அரசுக்கு 1590 கோடி ரூபா வரி வருமானம் இல்லாது போயுள்ளதாக மக்கள் மத்தியில் விமர்சனம் உருவாகியுள்ளது .
2020ம் ஆண்டு ஜூன் மாதம் இறக்குமதி செய்யப்படும் சீனி ஒரு கிலோவிற்கு 50 ரூபா இறக்குமதி தீர்வை அறவிட்ட நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ ஒக்டோபர் 13 ஆம் திகதி இலக்கம் 2197/12 என்ற வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒரே நேரத்தில் யாராலும் நம்ப முடியாத அளவு வெறும் 25 சதம் என்று இறக்குமதி தீர்வை வரியை குறைத்தார்.
வர்த்தகர் ஒருவர் ஒரு லட்சம் மெட்ரிக் டொன் சீனியை இலங்கைக்கு இறக்குமதி செய்யவென கப்பல்களில் ஏற்றி இருந்தார். ஆனால் சாதாரண நாட்களில் ஒரு மாதத்திற்கே இலங்கைக்கு 45000 மெட்ரிக் டொன் சீனி மாத்திரமே இறக்குமதி செய்யபப்படும் என சுங்கப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். எனினும் வர்த்தகர் தெரிந்து வைத்துக் கொண்டு தான் ஒரு லட்சம் மெட்ரிக் டொன் சீனியை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளர் என சந்தேகம் ஏற்படுகிறது .
வர்த்தகர் இறக்குமதி செய்த ஒரு லட்சம் மெட்ரிக் டொன் சீனி இலங்கை துறைமுகத்தை வந்தடைந்து விடுக்கப்பட்ட பின்னர் ஒக்டோபர் 27ம் திகதி மீண்டும் ஒரு வர்த்தமானி அறிவித்தலை விடுத்த நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ சீனி இறக்குமதி தீர்வை வரியை 40 ரூபாவாக அதிகாரித்தார். இறக்குமதி தீர்வை வரி தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் விடுத்து ஒரு மாதம் கடப்பதற்கு முன்னர் மீண்டும் தீர்வை வரியில் மாற்றம் செய்ய முடியாது என்ற போதிலும் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அதனை செய்துள்ளார்.
அதன்படி 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதியின் பின்னர் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி தீர்வை வரி வெறும் 25 சதமாகும். ஆனாலும் இந்த குறுகிய காலத்தில் வேறு எந்த வர்த்தகர்களுக்கும் விரைவாக சீனி இறக்குமதி செய்து கொள்ள முடியவில்லை. அத்துடன் குறித்த காலப் பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட சீனி பொது மக்களுக்கு நன்மை கிடைக்கும் வகையில் விலை குறைத்தும் விற்கப்படவில்லை. பழைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி சீனி இறக்குமதி தீர்வை வரி குறைக்கப்படுவது தெரிந்து ஒரு லட்சம் மெட்ரிக் டொன் சீனி இறக்குமதி செய்த வியாபாரிக்கு பாரிய லாபம் ஏற்பட்டுள்ளது. அந்த லாபம் அரசுக்கும் கிடைக்கவில்லை. இந்த செயற்பாட்டினால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நட்டம் 1590 கோடி ரூபா அதாவது 16 பில்லியன் ரூபா என நிதி அமைச்சு பாராளுமன்றில் ஏற்றுக் கொண்டது.
இது தற்போதைக்கு தெற்காசியாவில் இடம்பெற்ற பாரிய வரி மோசடியாக கருதப்படுகிறது
இப்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் அதிகாரத்தை கைப்பற்றவென இரவு பகல் பாராது தேர்தல் மேடைகளில் கூவிக் கூவி பிரச்சாரம் செய்த மத்திய வங்கி பிணை முறி மோசடி மூலம் அரசுக்கு ஆதாயம் இழக்கச் செய்யப்பட்டதாக அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை 69 கோடி ரூபா மோசடி செய்ததற்காகும். அத்துடன் அலோசியசுக்கு சொந்தமான கோடிக்கணக்கான பணம் அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து மத்திய வங்கியால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. உண்மையைக் கூறினால் அரசுக்கு இல்லாது போன 69 கோடி ரூபாவை விடவும் இரண்டு மடங்கு பணம் அலோசியஸ் குழுவிடம் இருந்து மீளப் பெறப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதி மோசடி அவ்வாறு அல்ல.
இந்த சீனி வரி மோசடியில் பெறப்பட்ட 1600 கோடி ரூபாவில் அரசியல்வாதிகளுக்கும் பங்குகள் இருக்கலாம் என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன .