உகண்டாவின் பிரபல பூங்கா ஒன்றில் நஞ்சூட்டப்பட்டதாக சந்தேகத்துடன் ஆறு சிங்கங்களின் சிதைக்கப்பட்ட இறந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குவின்ஸ் எலிசபத் தேசிய பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிங்கங்களின் தலைகள் மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் அந்த உடல்களை கழுகுகள் சூழ்ந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் உள்ளூர் பொலிஸாருடன் சேர்ந்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் விசாரணையை ஆரம்பித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த இந்த சிங்கங்கள் மரங்களில் ஏறும் தனித்துவமான திறன் பெற்றவையாகும்.
இந்த பூங்காவில் 2018 ஆம் ஆண்டு நஞ்சூட்டப்பட்ட சந்தேகத்தில் 11 சிங்கங்கள் இறந்து கிடந்ததோடு இவ்வாறு 2010 ஆம் ஆண்டு ஐந்து சிங்கங்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. உகண்டா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இயற்கை சுற்றுலாத் துறை 10 வீதம் பங்களிப்புச் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.