1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தலைமன்னாரில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற ரயில் - பஸ் விபத்தினை தொடர்ந்து புகையிரத கடவை காப்பாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ள நிலையில்,

இரண்டு புகையிரத கடவை நிலையத்தினை சேர்ந்த 6 காப்பாளர்கள் பணி விலகல் கடிதத்தினை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக வடக்கு, கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் றெகான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 16ஆம் திகதி தலைமன்னாரில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கும், அவனின் குடும்பத்திற்கு அனுதாபத்தினை தெரிவிக்கின்றோம். இந்த விபத்தானது புகையிரத திணைக்களத்தின் முழுமையான பொறுப்புக்கூறலேயாகும்.

வடக்கு, கிழக்கு எங்கும் புகையிரத கடவையில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் புகையிரத திணைக்களத்தின் நேர அட்டவணை வழங்கப்படுவதில்லை.

புகையிரத சமிக்ஞையினை காண்பிக்கும் சிவப்பு, பச்சை நிற கொடிகள் வழங்கப்படவில்லை. 2013ஆம் ஆண்டு 180 நாட்கள் அரச சேவையில் பணியாற்றி இருந்தால் சேவையில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்ற சட்டத்திற்கமைய உள்வாங்கப்பட்ட புகையிரத கடவை பணியாளர்களுக்கு நாளாந்தம் 250 ரூபா பொலிஸ் திணைக்களம் ஊடாக வழங்கப்படுவதுடன் எமக்கான முழுமையான பராமரிப்பிற்கு பொலிஸ் திணைக்களங்களே பொறுப்புக் கூறுகின்றன.

இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் பாதுகாப்பு கடவை ஊழியர்களை பாதிக்கும் விதத்தில் செயற்படுகின்றனர். சரியான விசாரணையினை மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் நீதி சரியான முறையில் நிலைநாட்டப்பட வேண்டும்.

கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற விபத்தின் பின் புகையிரத கடவை ஊழியர்கள் மன அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தலைமன்னார் பகுதியில் உள்ள இரண்டு கடவையில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் ஆறு பேர் தங்கள் பதவி விலகலை பொலிஸ் நிலையத்தில் கொடுத்துள்ளார்கள்.

இந்த கடவைக்குச் சரியான பாதுகாப்பினை பொலிஸாரே வழங்க வேண்டும். எதிர்வரும் மாகாணசபை தேர்தலுக்கு முன்னதாக எங்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. காரணம் ஜனாதிபதி செயலகத்துடன் கதைத்து வருகின்றோம்.

எதிர்வரும் நான்காம் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னதாக நிரந்தர நியமனம் தொடர்பிலான நிலைப்பாட்டினை அரசு முன்வைக்க தவறும் பட்சத்தில் நாடு தழுவிய ரீதியில் உள்ள 2064 புகையிரத கடவை ஊழியர்களும் ஒருமித்து இடைவிலகல் தொடர்பில் கலந்தாலோசித்து வருகின்றோம்.

வடக்கு, கிழக்கில் 145 புகையிரத கடவைகளில் 450 இற்கும் உட்பட்ட ஊழியர்கள் கடமையாற்றி வருகின்றார்கள்.

வடக்கு, கிழக்கில் சுமார் 25 கடவைகள் முழுமையாகப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. காரணம் 250 ரூபா சம்பளம் பொலிஸாரின் அச்சுறுத்தல்கள், பழிவாங்கல்கள், தொலைப்பேசி செயற்பாடுகளால் ஊழியர்கள் இடைவிலகியுள்ளார்கள்.

அரசினால் ஊழியர் நலன்சார்ந்த எந்த திட்டங்களும் முன்வைக்கப்படுவதில்லை கொட்டகை வசதியில்லை, மின்சார வசதி இல்லை, குடிநீர் வசதியில்லாத நிலையில் கடவைகள் பழுதடைந்துள்ள நிலையிலும் பெரும்பாலான இடங்களில் தடைகளே இல்லை ஊழியர்களே தங்கள் கையினால்தான் சைகையினை காட்ட வேண்டும்.

புகையிரதம் வருகின்றது என்று சொன்னால் கண்ணால் கண்டு அல்லது அதன் சத்தத்தினை காதால் கேட்டுதான் பாதுகாப்பினை வழங்குகின்றோம். கடந்த ஏழு ஆண்டுகளாக இவ்வாறு பணியாற்றும் ஊழியர்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் மன்னார் விபத்து தொடர்பில் புகையிரத காப்பாளர் மீது தான் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன என்று ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதிலளிக்கையில்,

இந்த குற்றச்சாட்டினை மறுக்கின்றோம். அன்று 2.20 மணிக்கு வரவேண்டிய புகையிரதம் 1.55இற்கு வருகின்றது.

அந்த இடத்தில் கொட்டகை இல்லாத காரணத்தினால் காவலாளி 50 மீற்றர் தூரத்தில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் தான் இருக்கின்றார்.

புகையிரத திணைக்களத்தின் முழுமையான தவறு அங்கு இடம்பெற்றுள்ளது. பேருந்தின் சாரதி அந்த இடத்தில் அவதானித்துச் சென்றிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி