மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக உலகின் மிக உயர்ந்த மனித உரிமைகள் அமைப்பு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதைத் தடுக்க கோட்டபய ராஜபக்ஷ நிர்வாகத்தின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2015 ம் ஆண்டுக்கு பிறகு தற்போதைய அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி, யு.என்.எச்.ஆர்.சி இலங்கை மீது ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது இது முதல் தடவையாகும், ஐ.நா. மாநாட்டில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் முதல் தோல்வி இதுவாகும்.
இந்த தீர்மானம் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு இலங்கையில் போர்க்குற்றங்கள் பற்றிய தகவல்களை சேகரித்து பாதுகாக்க உதவும். நாட்டில் எதிர்கால மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்களை சேகரிக்க ஐ.நா பொதுச் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 வாக்குகள் கிடைத்தன, ஆர்ஜென்டீனா, மெக்சிகோ மற்றும் உருகுவே போன்ற தென் அமெரிக்க நாடுகளுடன் ரஷ்யா, பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ் உள்ளிட்ட 11 நாடுகள் இந்த நடவடிக்கையை எதிர்த்தன.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெகநாத் கொலம்பகே இத்தீர்மானத்தை தோற்கடிப்பதில் இந்தியாவின் ஆதரவு பகிரங்கமாக கிடைக்கும் என்று கூறியிருந்தாலும், இந்தியா வாக்களிக்காத 14 நாடுகளுடன் இணைந்து கொண்டது. நேபாளம்,பஹ்ரைன்,லிபியா வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
எவ்வாறாயினும், யு.என்.எச்.ஆர்.சி.க்கு முன்னணி அங்கத்துவ நாடுகளின் வாக்குகளைப் பெற பிரிட்டன் முன்நின்றதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜெனீவா மாநாட்டில் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகருக்கு இலங்கை தொடர்பான தீர்மானத்தை செயல்படுத்த 2 மில்லியன் டொலருக்கும் அதிகமாக செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது.