சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள 13 தேங்காய் எண்ணெய் கொள்கலன்களில் அப்லடொக்ஸின் என்ற புற்றுநோய் ஊக்கி இதில் அடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புப் பிரவினால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களின் சங்கம் நேற்று (23) வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.
நான்கு இறக்குமதியாளர்களுக்குச் சொந்தமான அப்லொடொக்ஸின் அடங்கிய 13 எண்ணெய் கொள்கலன்கள் சந்தைக்கு விடப்பட்டுள்ளதாக அச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புத்திக சில்வா கூறியுள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட எண்ணையின் மாதிரியை பெற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் அப்லடொக்ஸின் புற்றுநோய் ஊக்கி அடங்கியுள்ளதை சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது.
அதற்கேற்ப மேற்படி எண்ணெய் மக்கள் நுகர்விற்காக சந்தைக்கு விநியோகிக்கப்படக் கூடாது என்பதால் அந்த கொள்கலன்களை உடனடியாக மீள் ஏற்றுமதி செய்யுமாறு இலங்கை சுங்கத் திணைக்களம் குறித்த நிறுவனத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், இது சந்தைக்கு விநியோகிக்கப்பட்டது எப்படி என்பதுதான் கேள்விக் குறியாக உள்ளது.
இந்நாட்டின் வருடாந்த தேங்காய் எண்ணெயின் தேவை 180,000 மெட்ரிக் தொன்களாகும். அவற்றில் தேசிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களால் சுமார் 25,000 மெட்ரிக் தொன் உற்பத்தி செய்யப்படுகிறது. எஞ்சிய 155,000 மெட்ரிக் தொன் எண்ணெய் இறக்குமதியாளர்களினால் இறக்குமதி செய்யப்படுகிறது.