கடின உழைப்புடன் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீது விதிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுமீதான விசாரனையின் முடிவு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அறிவிக்கப்படவுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் 12 ம் திகதியுடன் மூன்று மாதம் முடிவடைகின்றது.
ரிட் மனு தொடர்பான மனுவிற்கு 31 ஆம் திகதி தீர்ப்பளிக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அது தயாரிக்கப்படவில்லை என்பதால், நீதிபதிகள் அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயதுன்னே கொரயா ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய குழு இந்த வழக்கை இன்று வரை ஒத்திவைத்தது.
ரஞ்சன் ராமநாயக்க தனது நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்து செய்வதை எதிர்த்து இந்த ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
கனவு கலையுமா?
சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அடுத்த வாரம் ஒரு நாள் நாடாளுமன்ற அமர்விலேனும் கலந்து கொள்ளத்தவறினால் அவரது நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்க நேரிடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
நாடாளுமன்றத்தின் எந்தவொரு உறுப்பினரும் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு மேல் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளாவிட்டால் தானாகவே தனது இடத்தை இழக்க நேரிடும் என்பதை நாடாளுமன்றத்தின் நிலையியற் சட்டம் தெளிவுபடுத்துகின்றது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கக்கு ஜனவரி 12 ஆம் திகதி உச்ச நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
அதன்படி ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் 12 ம் திகதியுடன் மூன்று மாதம் முடிவடைகின்றது.