“தயவு செய்து மியன்மார் நாட்டுக்கு உதவுங்கள். எங்களுக்கு சர்வதேச அளவில் உடனடி உதவிகள் தேவை” என தாய்லாந்தில் இடம்பெற்ற உலக அழகிப் போட்டியில் பங்கேற்ற மியன்மார் பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வாரம் தாய்லாந்தில் நடந்த உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்ட ஹான் லே என்கிற மியன்மார் அழகி, தன் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சர்வதேச நாடுகளிடம் உதவி கோரியுள்ளார்.
மியன்மாரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இதுவரை அங்கு 43 சிறுவர்கள் உட்பட 500-க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆங் சாங் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள், சிவில் சமூகத்தினர், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவா்கள் இராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே உலக அழகிப் போட்டியில் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இராணுவ அடக்கு முறைகளுக்கு எதிராக சா்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க தான் தீர்மானித்ததாக ஹான் லே தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சை அடுத்து மீண்டும் மியன்மாருக்கு அவா் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை, மியன்மாரில் உள்ள தனது குடும்பத்தினரின் பாதுகாப்பு குறித்து அவா் கவலை வெளியிட்டுள்ளார்.