தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளத்திற்கான சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. மேற்கு வங்கம் மற்றும் அசாமில் இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளில் 3,998 பேர் வேட்பாளர்களாக களம் காணுகின்றனர். இதில் 3,585 பேர் ஆண்கள், 411 பேர் பெண்கள், 2 பேர் மூன்றாம் பாலினத்தவர்.
தமிழ்நாட்டில் மொத்த வாக்களர்களின் எண்ணிக்கை 6,28,69,955 பேர்.
நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் நடைபெறும் இந்த தேர்தல் முடிவுகள் மே 2ஆம் தேதி வெளியாகும்.
வாக்காளர் அட்டையை தவிர 11 அடையாள ஆவணங்களைப் பயன்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அவற்றில் ஆதார் அட்டை , பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை அடங்கும்.
கொரோனா காலம் என்பதால் முகக் கவசம் அணிவதும், ஆறு அடி சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் அவசியம்.
வாக்காளர்கள் அனைவரின் உடல் வெப்ப நிலையும் பரிசோதனை செய்யப்படும்.
கோவிட்-19 தொற்றுள்ளவர்கள் வாக்களிக்க மாலை 6 மணியில் இருந்து 7 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பு அங்கி அணிந்து வாக்களிக்க வேண்டும்.