உலக திருமதி அழகியான இலங்கையின் கரோலின் ஜூரி மற்றும் சூலா பத்மேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
திருமதி அழகி போட்டியின் இறுதி நிகழ்வின் போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
புஷ்பிகா சந்தமாலி சில்வா என்பவரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டது.
திருமதி அழகியாக தாம் தெரிவாகி மகுடம் சூட்டப்பட்ட போது, அதனை பறித்தெடுத்து மற்றுமொருவருக்கு சூட்டப்பட்டதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
கிரீடத்தை தலையிலிருந்து பறித்தெடுத்த போது காயம் ஏற்பட்டதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல பலாத்காரமான முறையில் தாம் நடத்தப்பட்டதாகவும் புஷ்பிகா சந்தமாலி சில்வா தமது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொண்ட கருவாத்தோட்டம் பொலிஸார், உலக திருமதி அழகியான இலங்கையின் கரோலின் ஜூரி மற்றும் சூலா பத்மேந்திரன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக சாட்சியங்களை சேகரிப்பதோடு கறுவாத்தோட்டம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.