அமெரிக்காவின் இந்தியானாபொலிசில் ஒரு துப்பாக்கிதாரி கண்மூடித்தனமாக சுட்டத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர்.ஃபெட் டெக்ஸ் வளாகத்தில் நடந்த இந்த சம்பவத்தில் பல முறை துப்பாக்கி வெடிப்பதை கேட்டதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். தானியங்கி துப்பாக்கியை ஒரு நபர் இயக்குவதைப் பார்த்ததாக ஒரு சாட்சி கூறுகிறது.
துப்பாக்கிதாரி தனி ஆளாக செயற்பட்டதாகவும், அவர் தம்மைத் தாமே சுட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அந்த இடத்தில் மேற்கொண்டு ஆபத்து ஏதுமில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
அருகில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை. அந்த விமான நிலையத்தில் தான், ஃபெட் டெக்ஸ் சரக்கு விமான சேவை முனையம் இடம் பெற்றுள்ளது.
"அதிகாரிகள் அங்கே விரைந்து வந்து துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து கொண்டிருக்கும்போதே அதைக் கையாண்டனர்," என்கிறார் மாநகர போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஜெனே குக்.
"துப்பாக்கிச் சூட்டு காயத்தோடு 8 பேர் அங்கே இறந்து கிடந்தனர். மேலும் பலர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்," என்கிறார் அவர்.
இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு தெரியும் என்றும், அதிகாரிகளோடு ஒருங்கிணைந்து செயற்படுவதாகவும் ஃபெட் டெக்ஸ் கம்பெனி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"பாதுகாப்பே எங்கள் முக்கிய குறிக்கோள். பாதிக்கப்பட்டவர்கள் குறித்தே சிந்திக்கிறோம்," என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டை பார்த்ததாக கூறும் ஃபெட் டெக்ஸ் ஊழியர் ஜெரமியா மில்லர் என்பவரை ஏ.எஃப்.பி. செய்தி முகமை மேற்கோள் காட்டியுள்ளது.