தென்னிலங்கை மக்களுடைய உரிமைகளை, எதிர்ப்புகளுக்காக கூறிய காரணத்தை கண்டறிந்து, அதனை சரி செய்ய முன்வர வேண்டுமெனத் தெரிவித்த வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,
அதை விடுத்து, வடக்கில் புலிப் பூச்சாண்டியை காட்டி, தமிழ் இளைஞர், யுவதிகளைக் கைதுசெய்வதை நிறுத்த வேண்டுமென்றும் கூறினார்.
வடக்கு பகுதியில் இடம்பெற்றுவரும் கைதுகள் தொடர்பில், யாழ்ப்பாணத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், வடக்குப் பகுதியில் இடம்பெற்றுவரும் கைதுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கோட்டாபய அரசாங்கம் பதவிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளாக முன்னரே, மக்கள் மத்தியில் அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன எனவும், அந்த எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்காக, வடபகுதியில் குறிப்பாக, யாழ்ப்பாண மாநகர மேயர் மணிவண்ணன் உட்பட ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் வகைதொகையின்றி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுகின்றனரெனவும் குற்றஞ்சாட்டினார்.
இங்கே கோட்டாபய அரசாங்கத்தால், புலிகள் மீள உருவாவது கட்டுப்படுத்துகின்றது, தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கட்டுப்படுத்தப்படுகின்றனர் என சிங்கள மக்களுக்கு காண்பிப்பதற்காகவே, இந்தச் செயற்பாடுகள் அரசாங்கத்தால் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனச் சாடிய அவர், இந்தச் செயற்பாட்டை தாங்கள் அனுமதிக்க முடியாதென்றும் கூறினார்.
சிங்கள மக்கள் எதிர்க்கிறார்கள் என்றால், அவர்களுடைய உரிமை, அந்த எதிர்ப்புக்காக அவர்கள் கூறிய காரணத்தைக் கண்டறிந்து, சரி செய்ய முன்வர வேண்டுமெனத் தெரிவித்த அவர், அதை விடுத்து, வடக்கில் புலிப் பூச்சாண்டியைக் காட்டி, தமிழ் இளைஞர், யுவதிகளைக் கைது செய்வதை நிறுத்த வேண்டுமென்றும் கூறினார்.
இவ்வாறு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றவர்கள், மூன்று மாதங்களுக்கும் மேல் தடுத்து வைத்து விசாரித்து, அவர்களது வாழ்வாதாரம், குடும்ப நிலைமை என்பவற்றை பாதிப்படையக் கூடிய வகையில் இந்த அரசாங்கம் செயற்படுகின்றதெனவும், சிவாஜிலிங்கம் கூறினார்.