நாட்டில் அரிசி மாபியாவை கட்டுப்படுத்த வேண்டுமாயின் வெளிநாட்டில் இருந்து குறைந்த விலையில் அரிசியை இறக்குமதி செய்வதே ஒரே வழிமுறையாகும். ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இதற்கு இடமளிக்க மறுக்கின்றார் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்தார்.
இறக்குமதிக்கு இடமளிப்பார் என்றால் நாட்டில் அரிசி விலையை இலகுவாக கட்டுப்படுத்த முடியும் எனவும் அமைச்சர் கூறினார். அரிசி மாபியாவை கட்டுப்படுத்த முடிந்த போதும் இவ்வாறு இறக்குமதி செய்யும் அரிசி மூலமாக கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கடந்த 2015 ஆம் ஆண்டில் அமைச்சர்கள் ஒரு சிலர் மீது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ள போதிலும் அது குறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதேபோல் எம்மால் மாபியாவை கட்டுப்படுத்தும் கொள்கையை முன்னெடுக்க முடிந்த போதும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது கொள்கையில் இருந்து மாறுபட மறுக்கின்றார்.
அதாவது அரிசியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய அவர் இடமளிக்க மறுக்கின்றார். இறக்குமதிக்கு இடமளிப்பார் என்றால் நாட்டில் அரிசி விலையை இலக்குவாக கட்டுப்படுத்த முடியும்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹெஷா விதானகே அரிசி மாபியா குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனை கூறினார்.