ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
கல்வியின் முக்கியத்துவத்தை தெளிவாக உணர்ந்துள்ளதால், அதற்கான நிதியொதுக்கீடு உள்ளிட்ட விடயங்களில் கூடுதல் கரிசனையுடன் நடந்து கொள்வதாக ஆளுனர் நஸீர் அஹமட் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடமேல் மாகாணத்தில் 1,671 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு குருணாகல் நகர மண்டபத்தில், ஆளுனர்நஸீர் அஹமட் தலைமையில் நடைபெற்றது.
இங்கு உரையாற்றிய வடமேல் மாகாண ஆளுனர்நஸீர் அஹமட், இலங்கையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கும் கூட கடுமையான தட்டுப்பாடு நிலவியது. மின்சாரம் இன்றி மக்கள் மணிக்கணக்கில் அவதிப்பட்டார்கள்.
ஆனால் இன்று அந்த நிலை மாறியுள்ளது. அனைத்து அத்தியாவசியப் பொருட்களும், தட்டுப்பாடு இன்றி தாராளமாக கிடைக்கின்றன. வரிசை யுகங்கள் மறைந்து நாடு ஓரளவுக்கு சுபீட்சமடைந்துள்ளது.
மறுபுறத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள சுபீட்ச நிலை காரணமாக தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்கான நிதியொதுக்கீடுகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன் காரணமாக தற்போது தொழில் வரிசைகள் உருவாகியுள்ளன.
அதன் ஒரு கட்டமாகவே இன்று உங்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாத காலத்திற்குள்ளாக நாங்கள் 4,200 பேரருக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை வழங்கியுள்ளோம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் இன்னும் சிறிது காலத்திற்குள் தொழில் வரிசைகளும் இல்லாதொழிக்கப்படும்.
தகுதி வாய்ந்த அனைவருக்கும் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அதன் இன்னொரு கட்டமாக வடமேல் மாகாணத்தின் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் இன்னும் 1,500 பேருக்கு விரைவில் ஆசிரியர் நியமனம் வழங்கவுள்ளோம்.
அதற்கான வயது எல்லையை 35 இலிருந்து 40 வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
நாட்டின் எதிர்காலம் கல்வி கற்ற சமூகத்தின் கைகளில் தங்கியுள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ககல்வியின் முக்கியத்துவத்தைத் தெளிவாக உணர்ந்துள்ளார். அதன் காரணமாக கல்வி மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளுக்கு தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார்.
அவரின் கல்விக் கொள்கையை அடியொற்றி, வடமேல் மாகாணத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
வடமேல் மாகாணத்தை , நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் முன்னணி மாகாணமாக முன்னேற்றுவதே எமது இலக்காகும். அதற்கான முக்கிய பொறுப்பு. இன்று பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெறும் உங்களுக்கு எதிர்கால சந்ததியினரை , நாட்டின் எதிர்கால தலைவர்களை தயார்படுத்தும் பாரிய பொறுப்பு உள்ளது. அதனை உரிய முறையில் மேற்கொண்டு, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உரிய பங்களிப்பை வழங்க வேண்டும்.
மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டிகளாக ஆசிரியர்கள் செயற்பட வேண்டும் என்றும் ஆளுனர் நஸீர் அஹமட் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் ராஜாங்க அமைச்சர்களான சாந்த பண்டார, அசோக பிரியந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான குருணாகல் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் சமன்பிரிய ஹேரத் எம்.பி., புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் அமல் சிந்தக மாயாதுன்னே எம்.பி., அசங்க நவரத்ன, சுமித் உடுகும்புற, அலி சப்ரி ரஹீம், மாகாண பிரதம செயலாளர் தீபிகா குணரத்தின, மாகாண கல்வி அமைச்சு, பொதுச்சேவைகள் ஆணைக்குழு என்பவற்றின் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.