">எமது கட்சிக்கு முதலில் ஆயுதங்கள் வழங்கியவர்கள்
ஜே.வி.பி கட்சியினரே. பின்னர் மக்களை சுடுவதற்கு எங்களிடம் ஜே.வி.பி ஆயுதங்களை கேட்டார்கள் ஆனால் நாங்கள் கொடுக்கவில்லை என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ( பிள்ளையான்) தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இன்று ( 29) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிள்ளையான் மக்களை அச்சுறுத்துவதாக அநுர குமார திசநாயக்க தெரிவித்திருந்தார். அநுர குமார திசநாயக்க தரப்பினரே எங்களுக்கு முதல் முறையாக ஆயுதங்களை வழங்கினர். அதன் பின்னர் மக்களை சுடுவதற்கு எங்களிடம் ஆயுதம் கேட்டார்கள்.
ஆனால் நாங்கள் அதனைக் கொடுக்கவில்லை. பிள்ளையான் மக்களை அச்சுறுத்துவதாக இருந்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான வாக்குகளைப் பெற்றது யார்?
எனவே, ஜனநாயகத்தை பற்றி பேசுவதாக இருந்தால் அநுரகுமார திசாநாயக்க யோசித்து பொறுப்பான தலைவராகப் பேச வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நாட்டை அழிக்க நினைக்கின்ற தலைவர் எங்கள் மண்ணில் வந்து பேசியதையிட்டு கவலையடைகிறேன். அவர்கள்தான் ஒரு பிரபல்யமான ஆயுதக் குழு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஆயுதம் தந்தவர்களும் அவர்கள்தான்.
பின்னர் அதனைக் கைமாறியதும் அவர்கள்தான் என்றும் பிள்ளையான் சாடினார். எனவே அந்த ஆயுதங்களை தேடி எடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அநுர குமார திசநாயக்காவுக்கு தெரிவிக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.