தான் மிகவும் நியாயமான
வர்த்தகங்களில் ஈடுபட்டே பணம் சம்பாதிப்பதாகவும் போதைப்பொருள் வியாபாரம் செய்ததில்லை எனவும் பிரபல மொடல் அழகியான பியுமி ஹன்சமாலி இன்று (1) தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நாரஹேன்பிட்டியில் உள்ள சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவில் முன்னிலையாகிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஒரு பெண் தொழில் நடத்தும்போது இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைப்பதற்காக வருந்துவதாகவும், தான் நிரபராதி என்பதால் என்ன குற்றச்சாட்டுகள் கூறினாலும் பிரச்சினை இல்லை எனவும் பியுமி ஹன்சமாலி தெரிவித்தார்.
தன்னிடம் 20 வங்கிக் கணக்குகள் இல்லை என்றும் இருக்கும் ஒன்பது கணக்குகளும் வணிகம் தொடர்பானவை என்றும் அவர் கூறினார்.
சந்தேகத்துக்கிடமான முறையில் சொத்து சேர்த்ததாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் பேரில் சட்டவிரோத சொத்துக்கள் குறித்த விசாரணைப் பிரிவினர் மேலும் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.