முன்னாள் விளையாட்டுத்துறை
அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோரை சாட்சியமளிக்காமல் விடுதலை செய்யுமாறு அவர்களது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கை மீதான உத்தரவு எதிர்வரும் 9ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது சதொச ஊடாக சுமார் 53 மில்லியன் ரூபா பெறுமதியான கெரம் போர்ட் மற்றும் செக்கர்களை கொள்வனவு செய்து விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததன் மூலம் அரசாங்கத்துக்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (01) அமல் ரணராஜா, பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் மகேன் வீரமன் ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.