3 நிறுவனங்களினால் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் ‘அப்லடொக்ஸின்’ என்ற புற்றூக்கி அதிகமாக அடங்கியிருப்பது இரண்டாவது முறையாக நடத்திய பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களினால் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டின் மீது மாதிரிகள் மீண்டும் பரிசோதிக்கப்பட்டன. மேற்படி தேங்காய் எண்ணெய் தரமானதல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளமையால் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காக இலங்கை சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன்படி அலி பிரதர்ஸ், எதிரிசிங்க எடிபல் ஒய்ல்ஸ், கந்தான ரிபைனரீஸ் ஆகிய நிறுவனங்கள் இறக்குமதி செய்த சுத்திகரிக்கப்படாத எண்ணெயில் ‘அப்லடொக்ஸின்’ என்ற புற்றூக்கி அதிகமாக அடங்கியுள்ளமை இரண்டாவது முறையாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தரப்படுத்தல் நிறுவனம் குறிப்பிடுகிறது.
‘அப்லடொக்ஸின்’ அடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்பு பிரிவினால் உறுதி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்படாத 183,000 கிலோ தேங்காய் எண்ணெய் அடங்கிய 13 கொள்கலன்கள் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.