10,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட வெலிவேரிய பொலிஸ் நிலையத்தின் முறைப்பாட்டு பிரிவின் பொறுப்பதிகாரியை அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கம்பஹா பிரதான நீதவான் மஞ்சுள கருணாரத்ன, இன்று (30) உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபரை அன்றைய தினம் கொழும்பு-1 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி,வெலிவேரிய பொலிஸ் நிலையத்துக்கு அண்மித்த பகுதியில் வைத்து 10,000 ரூபாய் இலஞ்சத்தை பெற்ற போது, இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். எனினும், அதன்போது சந்தேகநபர் அந்த பணத்தை விழுங்கிவிட்டார்.
இது தொடர்பில், அதிகாரிகளால் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுங்கிய பணத்தை எடுப்பதற்காக, சந்தேநகபர், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.
அதனையடுத்து, கம்பஹா வைத்தியசாலைக்குச் சென்று சந்தேகநபரை பார்வையிட்ட நீதவான், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.