கல்கிஸ்ஸ பொலிஸாரினால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்ட களுபோவில பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய ஒருவர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கஞ்சாவை வைத்திருந்தார் என பொய் குற்றஞ்சாட்டி கடந்த 18ம் திகதி தனது கணவரை கைது செய்து அவரை கடுமையாகத் தாக்கியுள்ளதாகவும், கடுமையாக தாக்கப்பட்ட தனது கணவர் வைத்தியசாலையில் 5 நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இறந்துவிட்டதாகவும் இறந்தவரின் மனைவி குறிப்பிடுகிறார்.
“கல்கிஸ்ஸ பொலிஸார் எனது கணவரை கைது செய்து பொய் குற்றஞ்சாட்டி மிருகத்தனமாக அவரை தாக்கியதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர். பிணையில் வீடு திரும்பிய அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். பிறகு அவரை நான் வைத்தியசாலையில் அனுமதித்தேன்.
இன்று காலையில் அவர் இறந்துவிட்டார். பொலிஸார் எனது கணவரை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளனர். இதற்கு சரியான நியாயம் கிடைக்க வேண்டும். 18ம் திகதி பொலிஸார் கைது செய்தனர். 19ம் திகதி பிணை கிடைத்தது. 21ம் திகதி அவரை வைத்தியசாலையில் அனுமதித்தேன். உடம்பெல்லாம் கடுமையாக வலிப்பதாகக் கூறினார் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. முதுகில் காயங்கள் இருந்தன. தலையில் கடுமையான காயம். பட்டியால் அடித்ததற்கான அடையாளங்கள் இருந்தன. கூரான ஆயுதத்தினால் குத்தியிருந்தனர்” என இறந்தவரின் மனைவி ஊடகங்களிடம் தெரிவித்தார்.