(எம்.எஸ்.எம். ஸாகிர்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின்
27 ஆவது வருட மாநாடு நாளை 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணிக்கு தபால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெறும்.
இந்த மாநாட்டின் முதல் அமர்வில் பிரதம அதிதியாக இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபை வதிவிட இணைப்பாளர் மார்க்ஸ் அன்றோ ரன்சே கலந்து கொள்வார்.
கௌரவ அதிதியாக இலங்கையின் ஈரான் இஸ்லாமிய குடியரசுத் தூதுவர் டாக்டர் அலி றீஸா டெல்கோஸ் கலந்து கொள்வார்.
பிரதம பேச்சாளராக பிரபல எழுத்தாளர் எம்.எல்.ஏ. மன்சூரும் கௌரவ பேச்சாளராக இந்திய - யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டசபை உறுப்பினருமான கே.ஏ.எம். முஹம்மட் அபூபக்கர் கலந்து கொள்வார்.
சண்டே ஐலேண்ட் பத்திரிகையின் ஆசிரியர் மெனிக் டி சில்வா வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளார்.
அத்துடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டத்தாபனத்தின் சிரேஷ்ட ஒலிபரப்பாளர் திருமதி புர்கான் பீ இப்திகார், ஐ.ரி என். வசந்தம் தொலைக்காட்சியின் முகாமையாளர் எம். சித்தீக் ஹனீபா, பிறை எப்.எம். பிரதானி பஷீர் அப்துல் கையூம், மூத்த ஊடகவியலாளர்களான சுஐப் எம். காசீம், எம்.எஸ். அமீர் ஹுஸைன், பிராந்திய ஊடகவியலாளர் எம்.எம்.எம் பஸீர், வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீகஜன், தினக்குரல் ஆசிரியர் ஆர்.பீ. ஹரன், உதயம் செய்தி ஆசிரியர் சிராஜ் எம். ஷாஜகான் ஆகியோரும் இதன்போது விருது வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.
நிகழ்வில் போரத்தின் உதவித் தலைவர் றிப்தி அலி தகவல் அறியும் சட்டம் தொடர்பான ஊக்குவிப்புக்காக விசேடமாக கௌரவிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த மகாநாட்டில் வருடாந்த நிர்வாகத் தெரிவும் இடம்பெறுகிறது. பலரும் பல பதவிகளுக்குப் போட்டியிடுவதுடன் இம்முறை தலைமைப் பதவிக்கு தற்போதைய தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான என்.எம் அமீன் போட்டியிடுவதுடன் சிரேஷ்ட ஊடகவியலாளரும் வளவாளருமான ரிப்தி அலி உட்பட பலரும் தலைமைப் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்