சிறீ லங்கா சுதந்திரக் கட்சி உட்பட 11 அரச பங்காளிக் கட்சிகள் தனி மே தின பேரணியை நடத்த முடிவு செய்துள்ளனர்.கடந்த வியாழக்கிழமை (01) மாலை நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் ரொஸ்மீட் பிளேஸில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்ற 11 கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் அமைச்சரவை அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிரி ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்ன தேரர், கெவிது குமாரதுங்க,ஏ.எல்.எம். அதாவுல்லா, தியூ குணசேகர, அசங்க நவரத்ன, பேராசிரியர் திஸ்ஸ விதான, டிரான் அலெஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
விமல் வீரவன்ச மற்றும் பிற அரசாங்க மாற்றுக் குழுக்களுடன் தனி மே தின பேரணியை நடத்த ஸ்ரீ.ல.சு.க தயாராகி வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ சிறீ லங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதிகளை வரவழைத்து நேற்று (02) விசேட கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.
இந்த கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண உட்பட பலர் கலந்து கொண்டதாகவும் மொட்டுக்கட்சியின் தலைமையில் மே 01 அன்று நடைபெறவுள்ள மே தின பேரணியில் பங்கேற்குமாறு பசில் ராஜபக்ஷ அவர்களிடம் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.