கொழும்பு துறைமுக நகரின் நிர்மாண வேலைகள் முடிவடையும் தருவாயில் இதனை நிர்வகிப்பதற்காக முழு அதிகாரங்களைக் கொண்ட 5 பேர் அடங்கிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இலங்கையின் நிலப்பகுதிக்கு வெளியே 446.6 ஹெக்டயார் கொண்ட விசேட பொருளாதார வலயம் என்ற வகையில் அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. துறைமுக நகரின் முதலீட்டு வாய்ப்புகளை வெளிப்படுத்தல், முதலீட்டாளர்களை பதிவு செய்தல், விசேட பொருளாதார வலயங்களில் திட்டங்களை அங்கீகரித்தல் மற்றும் வர்த்தக மோதல்களை தீர்த்தல் ஆகிய அனைத்தும் இந்த ஆணைக்குழுவின் ஆதிக்கத்திற்கு உட்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட அதிகாரங்களைக் கொண்ட ஆணைக்குழு குறுகிய காலத்திற்குள் வர்த்தமானியின் ஊடாக நியமிக்கப்படுமெனவும், 20வது அரசியல் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள உயர் பதவிகளுக்கு நியமிக்கும் அதிகாரத்தின்படி அதன் தலைவர் நியமிக்கப்படுவாரெனவும் தெரிய வருகிறது.
எவ்வாறாயினும், மேற்படி விசேட பொருளாதார வலயமும், அதன் நிர்வாக அதிகாரமும் அமுலுக்கு வந்து ஒரு வருடத்திற்கு பின்னர் இந்த துறைமுக நகரில் முதலீடு செய்வதற்காக இந்நாட்டுக்கு வரும் வியாபாரிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். இதற்கிடையே இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள தொழில் உரிமைகள் சட்டமூலம் உட்பட பல சட்டங்கள் துறைமுக நகரத்திற்குள் செல்லுபடியாகாதெனவும் தெரிய வருகிறது.
இதன் காரணமாக கொழும்பு துறைமுக நகரம் என்பது இந்நாட்டின் சட்டத்திற்கு வெளியில், வர்த்தக அபிலாஷைகளுக்காக சட்டங்களைப் பொருட்படுத்தாது நடாத்திச் செல்லப்படும் வியாபாரக் குகையாக ஆகிவிடும். இது சம்பந்தமாக வெளிப் பகட்டுகளும் பல்வேறு திட்டங்களும் வெளிவந்த போதிலும், துறைமுக நகரின் உண்மை நிலையான இந்நாட்டு மக்களின் வாழ்விற்கோ, சமூகப் பொருளாதார இருப்பிற்கோ எந்தத் தொடர்பும் இல்லாத, பண முதலைகளின் போட்டிக்கான இடமாக ஆகிவிடும்.
இது சம்பந்தமான முழுமையான தகவல்களை துறைமுகநகரின் இணையத் தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.